இந்து மதத்தின் பல தர்மசாஸ்திரங்களில் ஒன்றாக பண்டைய மனுஸ்ம்ருதி கருதப்படுகிறது. கடமைகள், உரிமைகள், சட்டங்கள், நடத்தை, நல்லொழுக்கங்கள் மற்றும் பல தர்ம தலைப்புகளில் ஸ்வாயம்புவ மனு மற்றும் ப்ருகு மஹரிஷி ஆகியோரால் வழங்கப்பட்ட ஒரு சொற்பொழிவாக தன்னை முன்வைக்கிறது.
ஸ்வாயம்புவ மனு என்பவர் யார்?
இதற்கு நாம் முதலில் ஹிந்து சமயத்தின் கால நிலைகளின் பார்வையை அறிதல் அவசியம். இதற்கு நாம் துணைக்கு அழைக்கப்போவது நடிகர், நகைச்சுவையாளர், குணச்சித்திரவியலாளர், பத்திரிக்கை ஆசிரியர், இன்றும் அரசியல் அரங்கில் கொண்டாடப்படும் சட்டையரிஸ்ட், நாடக ஆசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், ஆன்மீகவாதி மற்றும் வழக்கறிஞர் சோ ராமஸ்வாமி அவர்களை தான்.
இதோ அவரின் ஹிந்து மஹா சமுத்திரத்திலிருந்து சிறு துளி:
தொடங்குவதற்கு முன்னால், ஒரு உறுதி, ஒரு சங்கல்பம் செய்து கொள்கிறேன்.
இப்படி ஒரு செயலைத் துவங்குவதற்கு முன்பாக, செய்யப்படுகிற சங்கல்பத்திற்கான, பொருளைப் பார்த்தாலே - ஹிந்து மத விளக்கங்கள், சிந்தனைகள், ஒரு சமுத்திரம்தான் என்பது புரியும்.
அத்ய ப்ரம்ஹண: த்விதீய பரார்த்தே
ச்வேத வராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே
அஷ்டாவிம்சதி தமே
கலியுகே ப்ரதமே பாதே
ஜம்பூத்வீபே
பாரத வர்ஷே
பரத: கண்டே
மேரோ: தக்ஷிணே பார்ச்வே
சாலிவாஹன சகாப்பதே
அஸ்மின் வர்த்தமானே வ்யவஹரிகே
ப்ரபாவாதி சஷ்டி ஸம்வத்ஸாராணாம் மத்யே
தாரண நாம ஸம்வத்சரே
உத்தராயனே
ஹேமந்த ருதெள
மகர மாஸே
சுக்ல பக்ஷே
சதுர்த்யாயாம் சுப திதெள வாஸர:
ப்ருகு வாஸர யுக்தாயாம்
சதபிஷக் நக்ஷத்ர
சுப யோக
சுப கரண
ஏவம் குண விசேஷண விஸிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்த்யாயாம் சுப திதெள
'இப்போதுள்ள பிரம்ம தேவனின் ஆயுளில், இரண்டாவது பாதி...' என்று தொடங்குகிறது இந்த மந்திரம். இது என்ன? என்ற விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னால், ஒரு காலக்கணக்கு பற்றிய சில விளக்கங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.
பிரம்ம தேவனின் ஆயுள் என்ன? ஒரு வருடத்திற்கு 360 தினங்கள் கொண்ட 100 வருடங்கள். அந்த 'தினம்' என்பது பூவுலகக் கணக்கின்படி 432 கோடி வருடங்கள்; அவருடைய 'இரவு'ம் இத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது; ஒரு 'தினம்' கழிந்த நிலையில், சகல ஜீவராசிகளும் பூவுலக வாழ்க்கையின் முடிவை எய்துகின்றன; அடுத்த 'தினம்' மீண்டும் பிரம்ம தேவனின் படைப்பு நிகழ்கிறது.
பிரம்ம தேவனின் ஒரு தினம் பதினான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு ஒவ்வொன்றும் ஒரு மன்வந்தரம் (30,67,20,000 வருடங்கள்). இந்த மன்வந்தரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனு என்ற தெய்வத் தந்தையின் கீழ் வருகிறது. ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு பெயர் உண்டு. அவர் கீழ் வருகிற மன்வந்தரம் அவருடைய காலம் ஆகிறது. நாம் இருப்பது வைவஸ்வத மனுவின் காலம். இவர் ஏழாவது மனு.
இதில் சொல்லப்பட்டவாறு 14 மன்வந்தரத்தில் நாம் ஏழாவதில் இருக்கிறோம். இதில், முதல் மனு இருந்தார் அல்லவா, அவரின் பெயர் தான் ஸ்வாயம்புவ மனு. அவரின் சொற்களில் இருந்து உதிர்ந்தது தான் மனுஸ்ம்ருதி என்பது ஐதீகம். கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தியது என்ற நம்பிக்கை.
இந்த அறிமுகத்துடன் நாம் விஷயத்தை அறிந்து தெளிவோம் வாருங்கள்.
No comments:
Post a Comment